Sunday, November 27, 2011

வணங்குகிறேன்...

Wednesday, July 6, 2011

காடுமலை கடந்து...



காடுமலை கடந்துவந்தோம் அய்யா - உனைக்

கண்குளிர காணவந்தோம் அய்யா - அருள்
நாடிபுகழ் பாடிவந்தோம் அய்யா - உந்தன்
இணையடியை வணங்கவந்தோம் அய்யா
(காடுமலை...)

மலையெல்லாம் குடிகொண்டாய் அய்யா - பக்தர்
மனமெல்லாம் குடிகொண்டாய் அய்யா - தங்கச்
சிலையாகி நிலைகொண்டாய் அய்யா - கடுங்
சினம்கொண்டு மலைகொண்டாய் அய்யா
(காடுமலை...)

மறைபுகழும் மால்முருகன் அய்யா - தமிழ்
மணம்கமழும் வேல்முருகன் அய்யா - நமைச்
சிறைகொண்ட திருமுருகன் அய்யா - சிவ
மந்திரத்தின் குருமுருகன் அய்யா

(காடுமலை...)

மயிலோடு வலம்வருவாய் அய்யா - உடனே
மனமிறங்கி வரம்தருவாய் அய்யா - உயிர்ப்
பயம்நீங்கி பலம்தருவாய் அய்யா - என்றும்
அன்னையாகி கரம்தருவாய் அய்யா

(காடுமலை...)


பொய்கையிலே அவதரித்தாய் அய்யா - சுடும்
பொய்களெல்லாம் அழிக்கவந்தாய் அய்யா - உயிர்
மெய்யாகி தவழ்ந்துவந்தாய் அய்யா - சொல்
செயலாகி விழித்துநின்றாய் அய்யா

(காடுமலை...)

Sunday, June 26, 2011

ஆலயம்...





ஆலயம் என்பது அவன் வீடு
அதிலே அவனைத் தினம் தேடு

அன்பே அவனது ஆலயம்
அகமே அவனது ஆலயம்
அதுவே ஆண்டவன் ஆலயம்

(ஆலயம்....)




வேண்டும் வரம் தருவானாம்
வேதனை எல்லாம் தீர்ப்பானாம்

நல்லதை நினைத்தால்
நன்மையைச் செய்தால்

வேண்டும் வரம் தருவானாம்
வேதனை எல்லாம் தீர்ப்பானாம்

(ஆலயம்...)


பழமும் பாலும் வேண்டாமாம்
ஆடும் மாடும் வேண்டாமாம்

அன்பைப் பொழிந்தால்
அருளைச் சுரந்தால்

அதுவே அவனுக்குப் போதுமாம்
அதுவே அவனுக்கு வேணுமாம்

(ஆலயம்...)

Tuesday, May 24, 2011

அவலங்கள்...






நீதி நேர்மை
நினைத்துப் பார்த்தால்
நாளும் வறுமை





சட்டைப் பையில் சட்டம்
சக்தி உள்ளவர்களுக்கு
செலவழிக்க என்ன கஷ்டம்






சின்ன ஓட்டை
செல்ல செல்ல‌
சீரழிக்கிறது நாட்டை





பட்டப் பகலில் கொள்ளை
பார்த்துச் சொன்னால்
பெற்றெடுக்க வேண்டுமாம் பிள்ளை






அடுத்த அடுத்த கட்டம்
என்றே அலைக்கழிக்கும்
ஏழைகளை என்றும் சட்டம்

Saturday, April 9, 2011

நில் ஆ !




நெருங்கி வந்தது நிலவு
நேரமில்லையாம் பூமிக்கு...
நின்று, புன்னகைக்குக் கூட !‌



(இரமேசு அவர்களின் ஆங்கிலக் கவிதையின் தாக்கம்)

Sunday, April 3, 2011

பாமாலை - 1

பாவாலே பரம்பொருளைப் போற்றி பாடிய பாடல்களின் தொகுப்பு.தன்னுடைய இனிக்கும் குரலால் இறைவனைப் பாடி நம்மையெல்லாம் இறையென்னும் இசை இன்பவெள்ளத்தில் முழ்க வைத்த அன்புத் தாத்தாவிற்கு கோடான கோடி நன்றிகள்.


பாடல்:ஒற்றை மருப்பனை ஒய்யார வேலவனைக்
வெண்பா:வெண்பாச் சிற்பி வி.இக்குவனம்
இராகம்:யதுகுல காம்போதி
குரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்



பாடல்:பனிபோல் விலக்கிடும் பாவங்க ளெல்லாம்
வெண்பா:திகழ்
இராகம்:தேஷ்
குரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்



பாடல்:கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்
வெண்பா:திருஅருட்பா – இராமலிங்க அடிகளார்
இராகம்:அடாணா
குரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்



பாடல்:தடைதகர்க்க நீயிருக்க தாயேநான் அஞ்சேன்
வெண்பா:திகழ்
இராகம்:செஞ்சுருட்டி
குரல்:அய்யா சுப்புரத்தினம் அவர்கள்

கண்ணீர் அஞ்சலி

இன‌ப்படுகொலையில்

இறந்த அனைவருக்கும்


Photobucket

தமிழ்99 விசைப்பலகை