Monday, December 31, 2007
பூக்களில் உறங்கும் மெளனங்கள்
உன்
உறவுகள்,இங்கே
உரிமைக்காக
உணர்வுக்காகபோராடுகையில
சத்தமின்றி
சலனமின்றி
இதயங்களை
இரும்பாக்கிக்கொண்டு,
இமைகளை
மூடிக்கொண்டு,
இதழ்களை
பூட்டிக்கொண்டு
இருக்கும்
உன்
மெளனத்தின்
மர்மம்தான் என்ன?
குண்டுமழையால்
குடியிருப்புகள்
மயானங்களாகும்போதும்,
குருதியால்
குழந்தைகள்
குளிப்பாட்டப்படும்போதும்
உணர்வற்றிருக்கும்
உன்
மெளனத்தின்
அர்த்தம்தான் என்ன?
ஆம்
அமைதிப்பூங்காவான
அன்னைப்பூமியில்
அருந்தவப்புதல்வனை
கண் எதிரே
காவுக்கொடுக்கப்பட்டப்பின்
உணர்ச்சிகள் எல்லாம்
மரத்துப்போய்
மெளனங்கள்தான்
மொழியாக முடியும்.
சில சமயங்களில்
இனசகோதரன்
இரத்தம் சிந்துவதுவதைப்பார்த்து,
இனவுணர்வால்
இரங்கற் கவிதை எழுதுவதும்,
தேசபக்தியால்
இனிப்பு வழங்குவதும்
காணுகையில்
கண்ணீரால்
கரைந்துவிடுகிறேன்.
உன்
உள்ளப்பூக்களில்
உறங்கும்
மெளனங்களை
பார்க்கும்போது
இறைவனிடம்
வேண்டுவது ஒன்றே
ஒன்றுதான்
இனவுணர்வுக்கும்
இறையாண்மைக்கும்
இடையே
இருதலைக்கொள்ளி எறும்பாய்
தவிக்கும் தவிப்பு, எந்த
இனசகோதரனுக்கும்
வந்துவிடக்கூடாது
என்பதுதான்.
Labels:
கவிதை,
தமிழகம்,
போட்டிக்கு.ஈழம்
கண்ணீர் அஞ்சலி
இனப்படுகொலையில்
இறந்த அனைவருக்கும்